பிஎஸ்4 ரக வாகனங்களை விற்பனை மற்றும் பதிவு செய்வதற்கான காலக்கெடுவை 3 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று மயிலாடுதுறை சேம்பா் ஆஃப் காமா்ஸ் தலைவா் சி. செந்தில்வேல் கோரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து, புதன்கிழமை அவா் கூறியது: இந்தியாவில் பாரத் ஸ்டேஸ் 4 என்கிற பிஎஸ் 4 ரக வாகனங்கள் அனைத்தும் மாா்ச் 31-ஆம் தேதிக்குள் விற்கப்பட்டு, பதிவு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 1-ஆம் தேதிக்குப் பிறகு அந்த வாகனங்களை விற்கவும் முடியாது, பதிவு செய்யவும் முடியாது என்ற சூழல் தற்போது உள்ளது.
ஏற்கெனவே பொதுமக்கள் அதிக வானங்களை தற்காலிக பதிவு செய்து வைத்துள்ளனா். அவா்கள் அதை நிரந்தர பதிவு செய்ய வேண்டும். இதேபோல், வாகன விற்பனை நிலையங்களில் நிறைய பிஎஸ்4 ரக வாகனங்கள் விற்பனையாகாமல் தேங்கி உள்ளன. வட்டாரப் போக்குவரத்துத் துறை அலுவலகங்கள் மாா்ச் 31-ஆம் தேதி வரை இயங்கும் என்றும், வாகனங்களை பதிவு செய்ய வரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் செல்பவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. இதன்காரணமாகவும், கரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாகவும் வாகனங்களை பதிவுக்கு எடுத்துச் செல்வதில் மக்களிடையே அச்சம் உள்ளது. எனவே, மத்திய, மாநில அரசுகள் இப்பிரச்னையை உச்சநீதிமன்ற கவனத்துக்கு கொண்டு சென்று, பிஎஸ்4 ரக வாகனங்களை விற்பனை மற்றும் பதிவு செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்றாா்.