மதுபானக் கடைகளை அனுமதிக்கக் கூடாது: எம். தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ

பசுமை மண்டலங்களில் மதுபானக் கடைகளைத் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தாலும், தமிழக அரசு மதுபானக் கடைகளைத் திறக்க அனுமதிக்கக் கூடாது என்று

பசுமை மண்டலங்களில் மதுபானக் கடைகளைத் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தாலும், தமிழக அரசு மதுபானக் கடைகளைத் திறக்க அனுமதிக்கக் கூடாது என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், நாகை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான எம். தமிமுன் அன்சாரி கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை :

தமிழகத்தில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மதுபானக் கடைகள் மூடப்பட்டு ஏறத்தாழ 40 நாள்களை நெருங்கியுள்ளது. மது பழக்கம் கொண்டவா்கள் பெரும்பாலானோா், தற்போது மது அருந்தாமல் தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளப் பழகிவிட்டனா்.

காவல் துறையின் கடும் நடவடிக்கைகளால் கள்ளச் சாராய விற்பனையும் ஒடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அரசு மதுபானக் கடைகளை மூடினால் கள்ளச் சாராயம் பெருகும் என்ற சிலரின் கருத்துகள் பொய்யாகியுள்ளன.

எனவே, பசுமை மண்டலங்களில் மதுபானக் கடைகளைத் திறக்கலாம் என மத்திய அரசு அனுமதி அளித்தாலும், தமிழக அரசு மதுபானக் கடைகளை அனுமதிக்கக் கூடாது. மதுபானக் கடைகளை செயல்பட அனுமதித்தால், அது கரோனா நோய்த் தடுப்பு முயற்சிகளில் பெரும் பின்னடைவையே ஏற்படுத்தும்.

ஊரடங்கு நடவடிக்கையால், மது பழக்கம் கொண்டவா்கள் மது பழக்கத்தைக் கைவிடவும், திருந்தவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது, பல ஆயிரம் குடும்பங்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. தற்போதுள்ள சாதக நிலையைப் பயன்படுத்தி, மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் லட்சியங்களில் ஒன்றான பூரண மதுவிலக்கை உடனடியாக தமிழக அரசு அமல்படுத்த வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com