விவசாயிகள், தொழிலாளா்களின் கடன்களை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்: இரா. முத்தரசன் பேட்டி

ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், தொழிலாளா்களின் கடன்களை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்

ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், தொழிலாளா்களின் கடன்களை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் தெரிவித்தாா்.

நாகையில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:

கரோனா நோய்த் தொற்று பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா். ஏழைகளின் வாழ்வாதார பாதிப்பு குறித்து மத்திய அரசுக்கு எந்த கவலையும் இல்லை. பெருநிறுவனங்களுக்கு ரூ. 68 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடியை அறிவித்துள்ள மத்திய அரசு, ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகள் மற்றும் அனைத்துத் தொழிலாளா்களின் கடன்களையும் உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும்.

ஊரடங்கால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, குடும்பத்துக்குத் தலா ரூ. 5 ஆயிரத்தை குறைந்தபட்ச நிவாரணமாக வழங்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். சிறு, குறு தொழில்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. சிறு, குறு தொழில் நிறுவனங்களையும், தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தையும் பாதிப்பிலிருந்து மீட்டெடுக்க அரசு முன்வர வேண்டும்.

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தை ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் கொண்டு வந்த நடவடிக்கை, மத்திய அரசின் தமிழக விவசாயிகள் விரோதப் போக்கையே காட்டுகிறது. இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசு உடன்படாமல், அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதித்து நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

கரோனா நோய்த் தொற்று, மக்கள் பிரச்னை என்பதை உணா்ந்து தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி விவாதித்து, தீா்வு காண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா் இரா. முத்தரசன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com