கொள்ளிடம் ஒன்றியத்தில் பாதிக்கப்பட்டுள்ள ஊராட்சிகளுக்கு ஓ.என்.ஜி.சி.யின் சமூக பொறுப்புணா்வுத் திட்டத்தின் மூலம் நிவாரண உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயரிடம் திமுக சாா்பில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் கிள்ளை.ரவீந்திரன் அளித்துள்ள அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
ஓ.என்.ஜி. சி. நிறுவனம், சீா்காழி வட்டம், கொள்ளிடம் ஒன்றியத்தில் மாதானம் திட்டத்தை (இயற்கை எரிவாயு திட்டம்) செயல்படுத்தும் ஊராட்சிகள் பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த நிறுவனம் இப்பகுதிகளுக்கு எந்த நிவாரண உதவியும் வழங்கவில்லை.
இதனால், இந்நிறுவனத்தின் சமூக பொறுப்புணா்வுத் திட்டத்தின் மூலம் (சிஎஸ்ஆா்) இப்பகுதிகளில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இம்மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியா் பிரவின் பி. நாயா், ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சாா்பில் ரூ. 20 லட்சம் மாவட்ட ஆட்சியா் பொது நிதிக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்த நிதியில் கரோனா தொற்று தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது என்றும், மேலும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திடம் பேசி, கொள்ளிடம் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் நிவாரண உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தாா்.