பிகார் மாநில தொழிலாளர்கள் 75 பேர் 3 பேருந்துகள் மூலம் அவர்களது சொந்த ஊருக்கு செல்ல தஞ்சாவூர் ரயில் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் தங்கி போர்வை, தரை விரிப்புகள், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருள்கள் ஆகியனவற்றை விற்பனை செய்வது வழக்கம்.
அவ்வகையில், பிகார் மாநிலத்தில் இருந்து மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம் பகுதிகளில் தங்கி வியாபாரம் செய்து வந்த 75 பேர் கரோனா பொது முடக்க உத்தரவு காரணமாக சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் அந்தந்த பகுதிகளில் வருவாய்த்துறையினரால் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் மத்திய அரசு பொது முடக்க உத்தரவில் தளர்வு அறிவித்ததையொட்டி, மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டின்பேரில் அவர்கள் 75 பேரும் இன்று 3 பேருந்துகள் மூலம் மயிலாடுதுறையில் இருந்து தஞ்சாவூர் ரயில் நிலையத்திற்கு மாவட்ட நிர்வாகத்தால் அனுப்பி வைக்கப்பட்டனர்.
மயிலாடுதுறை கோட்டாட்சியர் வ.மகாராணி தலைமையிலான வருவாய்த் துறையினர் அவர்களை வழியனுப்பி வைத்தனர்.