மயிலாடுதுறையில் தங்க வைக்கப்பட்டிருந்த புலம்பெயர் ஜார்க்கண்ட் மாநில தொழிலாளர்கள் 25 பேர் அவர்களது சொந்த மாநிலம் செல்வதற்காக மயிலாடுதுறையில் இருந்து திருச்சி ரயில் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை காலை அனுப்பி வைக்கப்பட்டனர்.
மயிலாடுதுறை, சீர்காழி மற்றும் குத்தாலம் பகுதியில் ஜார்க்கண்ட் மாநில தொழிலாளர்கள் தங்கி தச்சுத்தொழில், இனிப்பகங்களில் கூலித்தொழில் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் கரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக சொந்த ஊருக்கு திரும்பிச் செல்ல முடியாமல் அந்தந்த பகுதிகளில் வருவாய்த் துறையினரால் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.
மத்திய அரசு ஊரடங்கு உத்தரவில் தற்போது தளர்வுகளை அறிவித்துள்ளதால் மயிலாடுதுறை, சீர்காழி மற்றும் குத்தாலம் பகுதிகளில் தங்க வைக்கப்பட்டிருந்த 25 பேர் மயிலாடுதுறையிலிருந்து திருச்சி ரயில் நிலையத்திற்கு பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் வ.மகாராணி தலைமையில் வட்டாட்சியர்கள் ஆர் முருகானந்தம் (மயிலாடுதுறை), சாந்தி (சீர்காழி), ஜெனிட்டா மேரி (குத்தாலம்) மற்றும் வருவாய்த்துறையினர் தொழிலாளர்களை வழியனுப்பி வைத்தனர்.