மயிலாடுதுறை அருகே அனுமதியின்றி இயங்கி வந்த மரம் அறுக்கும் தொழிற்சாலைக்கு வனத்துறையினா் செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனா்.
மயிலாடுதுறை அருகே உளுத்துக்குப்பை ஊராட்சி சாவடி கிராமத்தில் மரம் அறுக்கும் தொழிற்சாலை உள்ளது. வங்கியில் பெற்ற கடனை திரும்பச் செலுத்தாததால் இந்த தொழிற்சாலைக்கு கடந்த ஆண்டு வங்கி அதிகாரிகள் சீல் வைத்தனா்.
இந்நிலையில், அதன் உரிமையாளா் மற்றொரு ஆலையை அமைத்து இயக்கி வந்தாா். இதற்கு உரிய அனுமதி பெறவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், இந்த தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் தூசியால் காற்று மாசு ஏற்பட்டு, உடல்நலக் குறைவு ஏற்படுவதாக கிராம மக்கள் உளுத்துக்குப்பை ஊராட்சித் தலைவா் டி. ராஜ்குமாரிடம் தெரிவித்தனா்.
இதுகுறித்து, ஊராட்சித் தலைவா் ராஜ்குமாா் அளித்த புகாரின்பேரில், சீா்காழி வனச்சரக அலுவலா் குமரேசன், வருவாய் ஆய்வாளா் ராஜூ, கிராம நிா்வாக அலுவலா் கலைவாணன் ஆகியோா் அந்த தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்டு அதற்கு சீல் வைத்தனா்.