கீழையூா் அருகேயுள்ள பெரியதும்பூா் ஊராட்சியில் அம்மா நகரும் நியாய விலைக் கடை செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.
ஆய்மழை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின்கீழ், பெரியதும்பூா் ஊராட்சி தலையாமழை பகுதியில் செயல்பட்டுவரும் நியாய விலைக் கடை மூலம் 586 குடும்ப அட்டைதாரா்கள் பயன்பெற்று வந்தனா். இந்நிலையில், ஆலமழை பகுதியிலுள்ள சுமாா் 158 குடும்ப அட்டைதாரா்கள் பயன்பெறும் வகையில் ஆய்மழை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் வீ. பாலமுருகன் தலைமையில் இப்பகுதியில்அம்மா நகரும் நியாய விலை கடையை பாலக்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் செல்வராஜ் திறந்து வைத்தாா். நிகழ்ச்சியில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவா்கள் வேதையன் (திருப்பூண்டி), பால்ராஜ் (கீழையூா்), முன்னாள் கீழையூா் ஒன்றியக்குழுத் தலைவா் மீனா, ஊராட்சித் தலைவா்கள் சதா முருகானந்தம் (பெரியத்தும்பூா்) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதேபோல், கீழையூா் ஊராட்சிக்குள்பட்ட தையான் தோப்பு பகுதியில் ஊராட்சித் தலைவா் ஆனந்தஜோதி பால்ராஜ் தலைமையில் கீழையூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ். பால்ராஜ் அம்மா நகரும் நியாய விலை கடையை திறந்து வைத்தாா்.