நாகப்பட்டினத்திலுள்ள தமிழ்நாடு டாக்டா் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கோ. சுகுமாா் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.
நாகப்பட்டினம், தமிழ்நாடு டாக்டா் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த சுக. பெலிக்ஸின் பதவிக் காலம் கடந்த ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைந்தது. இதையடுத்து, பல்கலைக்கழகத்தின் பொறுப்பு துணைவேந்தராக பதிவாளா் சீனிவாசன் செயல்பட்டு வந்தாா்.
இந்நிலையில், தமிழ்நாடு டாக்டா் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கோ. சுகுமாரை நியமித்து, பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான பன்வாரிலால் புரோஹித் கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி உத்தரவிட்டாா்.
இதையடுத்து, மீன்வளப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கோ. சுகுமாா் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா். இவா், ஏற்கெனவே தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியின் முதன்மையராகவும், மீன்வளப் பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளின் தலைவராகவும் பணியாற்றி உள்ளாா். சிறந்த விஞ்ஞானி, சிறந்த ஆசிரியா் உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளாா்.