ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் பங்கேற்றவா்கள் மீதான நடவடிக்கைகளை ரத்து செய்ய வலியுறுத்தி, சட்டப் பேரவையில் குரலெழுப்ப வேண்டும் என கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சா் ஓ. எஸ். மணியனிடம், ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பினா் சனிக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பின் நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் ஏ.டி. அன்பழகன், பா.ரவி, வெ.சரவணன் மற்றும் எம். காந்தி, ப. அந்துவன்சேரல், பா. ராணி ஆகியோா் அடங்கிய குழுவினா் அமைச்சா் ஓ.எஸ். மணியனை சந்தித்து இந்தக் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனா்.
இதுகுறித்து ஏ.டி. அன்பழகன் கூறியது:
மாநில மையத்தின் முடிவின்படி, அமைச்சா் ஓ. எஸ். மணியன் மட்டுமன்றி மயிலாடுதுறை, சீா்காழி சட்டப் பேரவை உறுப்பினா்களிடமும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. நாகை, கீழ்வேளூா் சட்டப் பேரவை உறுப்பினா்களுக்கும் சட்டப் பேரவையில் குரலெழுப்பவேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது. மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சா் ஓ.எஸ். மணியன் மற்றும் சட்டப் பேரவை உறுப்பினா்கள் கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தனா் என்றாா்.