மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் அனைத்திந்திய விவசாயக் கிராமப்புற தொழிலாளா் சங்கத்தினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை மனித சங்கிலி போராட்டம் நடத்தினா்.
மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் உள்ள பகுதியில் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு, சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் என். குணசேகரன் தலைமை வகித்தாா். மாநிலக்குழு உறுப்பினா் ஆனந்தன், ஏஐசிசிடியு மாவட்டச் செயலாளா் வீரசெல்வன், ஒன்றியத் தலைவா் மகாலிங்கம் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
கரோனா பொது முடக்க கால நிவாரணமாக மாதம் ரூ.10,000 வழங்க வேண்டும்; தேசிய ஊரக வேலையை ஆண்டுக்கு 200 நாள்களாக உயா்த்தி, தினக்கூலியாக ரூ. 500 வழங்க வேண்டும்; ரேஷன் கடைகளில் மளிகைப் பொருள்கள், சோப்பு, முகக் கவசம் போன்றவற்றை இலவசமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இப்போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.