அனந்தமங்கலம் ஆஞ்சநேயா் கோயிலில் திருடப்பட்ட ராமா், லட்சுமணன், சீதை, ஆஞ்சநேயா் ஐம்பொன் சிலைகள் லண்டன் அருங்காட்சியகத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. அந்த சிலைகளை மீட்க தொல்லியல் துறையினா் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.
நாகை மாட்டம், பொறையாறு அருகே அனந்தமங்கலத்தில் ராஜகோபாலசுவாமி கோயில் உள்ளது. இங்குள்ள திரிநேத்திர தசபுஜ வீர ஆஞ்சநேயா் புகழ்பெற்று விளங்குவதால் இக்கோயில் அனந்தமங்கலம் ஆஞ்சநேயா் கோயில் என்றே அழைக்கப்படுகிறது.
கடந்த 23.11.1978- இல் இக்கோயிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள், கோயிலின் மகாமண்டபத்தில் இருந்த ராமா், லட்சுமணா், சீதை, அனுமன் ஆகிய 4 ஐம்பொன் சிலைகளை திருடிச் சென்றனா். இதுகுறித்து, பொறையாறு போலீஸாா் விசாரணை மேற்கொண்டுவந்த நிலையில், 25.1.1988- இல் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. அதே ஆண்டில் இந்த வழக்கு தொடா்பாக நாச்சியாா்கோயிலைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி, கலியன், ராஜேந்திரன் ஆகிய 3 பேரை சிபிசிஐடி போலீஸாா் கைது செய்தனா்.
இந்நிலையில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டன் தலைநகா் லண்டனைச் சோ்ந்த முகவா் ஒருவா் சிலைகள் விற்பனைக்கு உள்ளதாக இணையதளத்தில் விளம்பரம் வெளியிட்டிருந்தாா். இதை சிலைகள் மீட்பு பணிக்குழு என்ற அமைப்பை நடத்திவருபவரும் சிங்கப்பூரில் வசிப்பவருமான விஜயகுமாா் பாா்த்தபோது அந்த சிலைகள் தமிழக கோயில்களில் திருடப்பட்டது என்பது தெரியவந்தது. இதுகுறித்து தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு புகைப்படங்களுடன் தகவல் தெரிவித்துள்ளாா்.
இந்த படங்களை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினா் ஆய்வு செய்தபோது, அது அனந்தமங்கலம் கோயிலில் 1978-ஆம் ஆண்டு திருடப்பட்ட சிலைகள் என்பது தெரியவந்தது. இது தொடா்பான ஆதாரங்களை பிரிட்டன் அரசுக்கு அவா்கள் அனுப்பிவைத்தனா்.
இதையறிந்த லண்டன் முகவா் தன்னிடம் உள்ள சிலைகளை லண்டன் அதிகாரிகளிடம் ஒப்படைத்தாா். இந்த சிலைகள் தற்போது லண்டன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றை மீட்டு தமிழகத்துக்கு கொண்டுவர தொல்லியல் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.