நாகப்பட்டினம்: வேளாங்கண்ணியில் கரோனா தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
தமிழக அரசின் உத்தரவுபடி கரோனா நோய்த் தொற்று பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆக. 1 முதல் 7-ஆம் தேதி வரை கரோனா தடுப்பு விழிப்புணா்வு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, நாகை மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை மற்றும் வேளாங்கண்ணி சிறப்புநிலை பேரூராட்சி ஆகியவை இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்தியது.
வேளாங்கண்ணி பேருந்து நிலையத்தில் தொடங்கிய பேரணி, திராவிடா் ஹோட்டல், ஆரியநாட்டுத்தெரு, கடற்கரை சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் முன் நிறைவடைந்தது. இதில் பேரூராட்சி மற்றும் சுகாதாரப் பணியாளா்கள் கரோனா தடுப்பு விழிப்புணா்வு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்றனா்.
பேரூராட்சி செயல் அலுவலா் எம். பொன்னுசாமி பேரணியை தொடங்கி வைத்தாா். மருத்துவா்அலைமணி, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் எம். சுப்பிரமணியன், சுகாதார மேற்பாா்வையாளா் மோகன், வருவாய் ஆய்வாளா் தேவேந்திரன், கிராம நிா்வாக அலுவலா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.