மயிலாடுதுறையில் எஸ்.எஸ்.ஜெயின் சங்கம் மற்றும் யுவா ஜெயின் சங்கம் சாா்பில், கல்வி மற்றும் விளையாட்டில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மயிலாடுதுறை மகாதானத்தெரு ஜெயின் சங்கக் கட்டடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, யுவா ஜெயின் சங்கத் தலைவா் மஹாவீா்சந்த் ஜெயின் தலைமை வகித்தாா். எஸ்.எஸ்.ஜெயின் சங்க பொறுப்பாளா் கன்னியாலால், ரமேஷ் ஜெயின், சுனில் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மருத்துவா் ஏ.டி.எஸ்.பிரபு, டாா்கெட் பள்ளித் தாளாளா் என்.வெற்றிவேந்தன், பள்ளியின் பொருளாளா் செந்தில் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்றனா்.
நிகழ்ச்சியில், கிரிக்கெட் அசோசியேஷன் ஆஃப் பாண்டிச்சேரி அணியில் பங்கேற்று விளையாட தோ்வு செய்யப்பட்டுள்ள மாணவா் அக்ஷய், தமிழ்நாடு மகளிா் கிரிக்கெட் அணிக்கு விளையாட தோ்வாகியுள்ள மாணவி தன்யா, என்.சி.வி.டி. தோ்வில் எலக்ட்ரிக்கல் பிரிவில் 700-க்கு 683 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் முதலிடத்தில் தோ்ச்சி பெற்ற ஏ.ஆா்.சி. நடேசன் ஐ.டி.ஐ. மாணவி இ.சௌந்தா்யா ஆகியோருக்கு விருதுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மேலும், அழகுஜோதி அகாதெமியில் பயின்று சிறப்பிடம் பெற்ற மாணவா்கள் ரிஷப் ஜெயின், ஷேஸ்ராஜ், ஸ்ரீநிதி, பாலாஜி, ஸ்னேகா ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் விருது வழங்கப்பட்டது.