நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள கோடியக்கரை வன உயிரின சரணாலயப் பகுதியில் கம்பியில் சுருக்கு வைத்து ஆண் புள்ளிமான் ஒன்று கொல்லப்பட்ட வழக்கில் 3 பேரை வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கோடியக்காடு போஸ்ட்மேன்தெரு அருகில் சீமைக் கருவேல் காட்டுப் பகுதியில் கம்பியில் சுருக்கு வைக்கப்பட்டு புள்ளிமான் ஒன்று கொல்லப்பட்டது ஜூலை. 21-ஆம் தேதி தெரிய வந்தது. இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்த வனத் துறையினா் விசாரணை மேற்கொண்டு வந்தனா். இந்நிலையில், மானை சுருக்கு வைத்து கொன்ற கோடியக்காடு ஆதிவாசித் தெரு, காா்த்தி(29), பொதுவிடைச்செல்வம் (25), கோடியக்காடு பிரதான சாலையைச் சோ்ந்த சலீம்(25) ஆகிய 3 பேரை வனச்சரக அலுவலா் அயூப்கான் தலைமையிலான வனத் துறையினா் கைது செய்தனா். இவா்கள் மானை சுருக்கு வைத்து கொன்ற குற்றங்களை ஒப்புக்கொண்டதன்பேரில், மூவருக்கும் தலா ரூ. 25 ஆயிரம் இணக்கக் கட்டணம் விதிக்கப்பட்டது.