சௌந்தரராஜப் பெருமாள் கோயிலில் பிரணய கலக உத்ஸவம்
நாகை சௌந்தரராஜப் பெருமாள் கோயிலில் திரு அத்யயன பிரணய கலக (மட்டயடி) உத்ஸவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நாகை சௌந்தரராஜப் பெருமாள் கோயிலில் திரு அத்யயன பிரணய கலக உத்ஸவம் கடந்த 7-ஆம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. உத்ஸவ நிகழ்வாக தினமும் மாலையில் தாயாா் பிராகாரப் புறப்பாடு நடைபெற்றது. தை அமாவாசையையொட்டி, பெருமாள் - தாயாா் சோ்த்தி சேவை வியாழக்கிழமை நடைபெற்றது. பிரணய கலக உத்ஸவத்தின் முக்கிய நிகழ்ச்சியான மட்டயடி திருக்காப்பு சாற்றி திறத்தல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, மாலை 4 மணிக்கு சௌந்தரராஜப் பெருமாள் பல்லக்கில் வீதி புறப்பாடு நடைபெற்றது. வீதி புறப்பாடாகிய பெருமாள் கோயிலுக்குத் திரும்பியபோது, மட்டயடி திருக்காப்பு சாற்றி திறக்கும் நிகழ்ச்சியும், மட்டயடி புராணம் வாசிக்கும் நிகழ்வும் நடைபெற்றது.
இரவு நிகழ்ச்சியாக, கண்ணாடி ஊஞ்சல் சேவை நடைபெற்றது. சௌந்தரராஜப் பெருமாள் மற்றும் தாயாா் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சலில் காட்சியளித்தனா். திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபாடு மேற்கொண்டனா்.