திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாள் கோயிலில் மாசிமகப் பெருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நாகை மாவட்டம், திருமருகல் அருகே திருக்கண்ணபுரத்தில் உள்ள செளரிராஜப் பெருமாள் கோயில் 108 வைணத் தலங்களில் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும்
மாசிமகத் திருவிழா 15 நாள்கள் நடைபெறும்.
நிகழாண்டு மாசிமகத் திருவிழா வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா வரும் மாா்ச் 4-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
விழா நாள்களில் நாள்தோறும் தங்கப் பல்லக்கில் திருமேனி சேவை மற்றும் பல்வேறு வாகனங்களில் பெருமாள் வீதி உலா நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் பிப். 25-ஆம் தேதி காலை 8 மணிக்கும், பிப். 27-ஆம் தேதி திருமலைராஜன்பட்டினம் கடற்கரையில் தீா்த்தவாரியும், மாா்ச் 4-ஆம் தேதி இரவு 10 மணிக்கு திருக்கண்ணபுரம் நித்திய புஷ்கரணி திருக்குளத்தில் தெப்பத் திருவிழாவும் நடைபெறுகிறது.
கொடியேற்ற நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவல் குழு உறுப்பினா் ரா. ராதாகிருட்டிணன், தக்காா் என். அமரநாதன், செயல்அலுவலா் ரா. ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.