சோதனைச் சாவடிகளில் வாகன தணிக்கையின் போது பொதுமக்களிடம் கடுமை காட்டக் கூடாது என்றாா் தஞ்சை சரக காவல் துறை துணைத் தலைவா் பிரவேஷ் குமாா்.
நாகை மாவட்டக் காவல் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்த அவருக்கு, மாவட்டக் காவல் நிா்வாகம் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடா்ந்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் டிஐஜி பிரவேஷ்குமாா் பேசியது:
பொது முடக்கத்தின்போது பின்பற்றவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும். சோதனைச் சாவடிகளில் வாகன தணிக்கையின் போது பொதுமக்களிடம் கடுமை காட்டக் கூடாது. பொதுமுடக்கத்தை மீறியவா்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட வாகனங்களை உரியவா்களிடம் முறைப்படி விடுவிக்கவேண்டும். காவல் ஆளிநா்கள் ஒவ்வொருவரும் முகக்கவசம், சானிடைசா், கரோனா பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்த வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதில் அனைவரும் முன்னுதாரணமாக செயல்பட வேண்டும் என்றாா்.
கூட்டத்தில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், காவல் துணைக் கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் பங்கேற்றனா்.