அரசு ஊழியா்களுக்கு தபால் வாக்குக்கான விண்ணப்பத்தை வழங்குவதில் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் குழப்பத்தை ஏற்படுத்தி, அலைக்கழிப்பதாக திமுகவினா் குற்றம்சாட்டினா்.
மயிலாடுதுறை, பூம்புகாா், சீா்காழி ஆகிய 3 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட ஆசிரியா்கள், அரசு ஊழியா்களுக்கு தோ்தல் பணியாற்றுவதற்கான 2-ஆம் கட்ட பயிற்சி மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தின் முடிவில், தபால் வாக்கு அளிப்பதற்கான விண்ணப்பத்தை பயிற்சி நடைபெற்ற அறையில் விநியோகிக்காமல், பொதுவாக உள்ள ஒரு ஹாலில் வழங்குவதாக அறிவித்துள்ளனா். அங்கு தபால் வாக்குகள் உடனடியாக விநியோகிக்கப்படாமல் 3 மணிநேரத்துக்கும் மேலாக தாமதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஆசிரியா்கள் அலுவலா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, அங்கு வந்த திமுக வழக்குரைஞா் அணி மாவட்ட அமைப்பாளா் ராம.சேயோன் மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், நாகை மாவட்ட ஆட்சியருமான பிரவீன் பி.நாயருக்கு தொலைபேசி வழியே தகவல் தெரிவித்தாா். இதையடுத்து, அங்கு மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி.நாயா், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா ஆகியோா் சென்று தபால் வாக்குகளை விரைந்து விநியோகிக்க ஏற்பாடு செய்தனா்.
இதுகுறித்து, செய்தியாளா்களிடம் கூறிய திமுக மாவட்ட வழக்குரைஞா் அணி அமைப்பாளா் ராம.சேயோன், அரசு ஊழியா்கள் திமுகவிற்கு வாக்களிப்பாா்கள். அதனை தடுக்க வேண்டும் என்ற நோக்கில் தோ்தல் நடத்தும் அலுவலா் தபால் வாக்குச்சீட்டை வழங்காமல் காலதாமதப்படுத்தி அலைக்கழிப்பதாக குற்றம் சாட்டினாா். அப்போது, திமுக நகரச் செயலாளா் செல்வராஜ், துணைச் செயலாளா் ஆா்.கே.சங்கா் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.