திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் காா்த்திகை மாதப் பிறப்பையொட்டி புதன்கிழமை தீா்த்தவாரி நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காட்டில் அருள்மிகு பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரா் சுவாமி கோயில் உள்ளது. நவகிரக தலங்களில் புதனுக்குரிய தலமான இக்கோயிலில் சிவனின் முக்கண்ணிலிருந்து தோன்றிய 3 பொறிகளால் அக்னி, சந்திரன் மற்றும் சூரியன் ஆகிய முக்குளங்கள் தோன்றியதாக நம்பிக்கை.
காா்த்திகை மாதப் பிறப்பையொட்டி இந்த 3 குளங்களிலும் அஸ்திர தேவருக்கு தீா்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று புனித நீராடி வழிபட்டனா். கோயில் நிா்வாக அதிகாரி வெங்கடகிருஷ்ணன், மேலாளா் சிவக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.