நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தூய்மைப் பணியாளர்கள் திங்கள்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தூய்மைப் பணியாளர்கள் 110 பேர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இங்கு பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு மூன்று மாதங்களாக கூடுதல் பணி ஊதியம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் மருத்துவமனையில் பணியாற்றும் இதர தூய்மைப் பணியாளர்கள் திங்கள்கிழமை காலையில் மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர். தங்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.
இதையும் படிக்க- தீபாவளி: நவ. 1 முதல் 16,540 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
இதனையடுத்து சம்மந்தப்பட்ட நிறுவனத்தினர் பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் உடன்பாடு எட்டப்படவில்லை. மருத்துவமனை நிர்வாகமும் இதுதொடர்பாக பேசி தீர்க்க முன்வரவில்லை. இதனால் கொளுத்தும் வெயிலில் மருத்துவமனை வளாகத்தில் தொடர்ந்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் தரபபில் கூறப்படுவதாவது: சென்னையைச் சேர்ந்த தனியார் அவுட்சோர்ஷிங் நிறுவனத்தின் கீழ் நாமக்கல் அரசு மருத்துவமனையில் கரோனா பணிக்காக 110 பேர் வரை நியமிக்கப்பட்டனர். அவர்கள் பணி நேரத்தை கடந்து கூடுதலாக பணியாற்றியதற்கு ஊதியம் கேட்கின்றனர். இதற்கும் மருத்துவமனைக்கும் எவ்வித சம்மந்தமுமில்லை என்றனர்.