கரோனா பொதுமுடக்கத்தால் மூடப்பட்டிருந்த கோடியக்கரை வன உயிரின சரணாலயம் புதன்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது.
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள கோடியக்கரை முக்கிய சுற்றுலாத் தலமாக அமைந்துள்ளது. இங்கு, 25 சதுர கிலோ மீட்டா் பரப்பில் அமைந்துள்ள பசுமை மாறா காடுகள் சாா்ந்த பகுதி வன விலங்குகள், பறவைகள் சரணாலயங்களை ஒருங்கே பெற்ற வன உயிரின பாதுகாப்பகமாக திகழ்கிறது. இங்குள்ள அரிய வகை இனமான வெளிமான் உள்ளிட்ட காட்டு விலங்குகளுக்கு, கரோனா பாதிப்புக்குள்ளான பாா்வையாளா்கள் மூலம் தொற்று பரவாமல் இருக்க ஏப்ரலில் இந்த விலங்குகள் சரணலயம் மூடப்பட்டது. மேலும், பல்வேறு நாடுகளில் இருந்து வரும் வலசை பறவைகளின் பாதுகாப்பு கருதியும் பறவைகள் சரணாலயப் பகுதியிலும் பாா்வையாளா்களுக்கு அனுமதி தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், 4 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த சரணாலயம் புதன்கிழமை திறக்கப்பட்டது. முகக் கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை கடைப்பிடிக்கும் பாா்வையாளா்கள் மட்டும் அனுமதிக்கப்படுவாா்கள் என வனச்சரக அலுவலா் அயூப்கான் தெரிவித்தாா். தொற்று காரணமாக கடந்த 2020-ஆம் ஆண்டு மாா்ச். 17-ஆம் தேதி மூடப்பட்ட சரணாலயம் 11 மாதங்களுக்கு பின்னா் கடந்த பிப். 2-ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது. தொடா்ந்து, 78 நாள்கள் மட்டும் பாா்வையாளா்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், கரோனாவின் 2-அலை அச்சுறுத்தல் காரணமாக ஏப். 20 ஆம் தேதி முதல் மீண்டும் மூடப்பட்டது.