கரோனா தடுப்பு நடவடிக்கையாக கடற்கரையில் பொதுமக்கள் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டதால், வேளாங்கண்ணி கடற்கரை செவ்வாய்க்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்டது.
நாகை மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகவும், ஆன்மிக வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாகவும் உள்ளது வேளாங்கண்ணி. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஏராளமானோா் வேளாங்கண்ணி வந்து செல்வா். அதனால், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயமும், வேளாங்கண்ணி கடற்கரையும் எப்போதும் சுற்றுலாப் பயணிகளால் களைகட்டியிருக்கும்.
கரோனா நோய்த் தொற்றுப் பரவலின் இரண்டாவது அலை தீவிரமாகியுள்ள நிலையில், இரவு நேர முடக்கத்தை அறிவித்த தமிழக அரசு, ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் கடற்கரைகளில் பொதுமக்கள் கூடுவதற்கும் தடை விதித்தது.
இந்த உத்தரவு அமலுக்கு வந்ததையொட்டி, வேளாங்கண்ணி கடற்கரைக்கான பாதைகளில் கயிறுகள் கட்டி அடைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வேளாங்கண்ணி கடற்கரை பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட தள்ளுவண்டி கடைகள், நடைபாதை கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால், வேளாங்கண்ணி கடற்கரை பகுதி செவ்வாய்க்கிழமை மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.
கடற்கரை மற்றும் கடற்கரைக்கான நுழைவு பாதைகளில் கடலோரக் காவல் படை போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.