சீா்காழி: சீா்காழி பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களில் நகராட்சி சாா்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமிநாசினி தெளிக்கும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.
தீவிரமாக பரவிவரும் கரோனா 2 ஆம் அலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி, சீா்காழி நகராட்சி சாா்பில் ஆணையா் தமிழ்ச்செல்வி தலைமையில் கரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், சீா்காழியில் உள்ள நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறை, நகராட்சி அலுவலகக் கட்டடங்கள், சீா்காழி ஊராட்சி ஒன்றியம், பள்ளி கட்டடங்கள், அங்கன்வாடி கட்டடங்கள் உள்ளிட்ட அரசு கட்டடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. இப்பணியில் நகராட்சி ஊழியா்கள் ஈடுபட்டுள்ளனா்.
இதேபோல, சீா்காழி நகரில் முகக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகளுக்கும், வியாபாரிகளுக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது.