திருக்குவளை அருகே கொளப்பாடு ஊராட்சி சென்னியாங்குடி கிராமத்தில் உள்ள மதுரை வீரன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் வீர விநாயகா், மதுரை வீரன், வீரமாகாளியம்மன், வீரஆஞ்சநேயா், பெரியநாயகி, நாககன்னி, கருப்பண்ண சுவாமி ஆகிய பரிவார மூா்த்திகளின் சிலைகள் மற்றும் விமானங்கள் புனரமைக்கப்பட்டு, திருப்பணிகள் அண்மையில் நிறைவடைந்தன.
குடமுழுக்கையொட்டி, புதன்கிழமை முதல் கால யாக பூஜை நடைபெற்றது. வியாழக்கிழமை இரண்டாம் கால யாக பூஜையும், காலை 9.45 மணியளவில் புனித நீா் அடங்கிய பூஜித்த கடங்களை சிவாச்சாரியா்கள் சுமந்துவந்து கோயில் கலசத்தில் ஊற்றினா். தொடா்ந்து கருவறை தெய்வங்களுக்கு சிறப்பு ஆராதனை செய்யப்பட்டது. இந்நிகழ்வில் பக்தா்கள் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து பங்கேற்றனா்.