மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி கடற்கரை பகுதிக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டதால் செவ்வாய்க்கிழமை ஆடிப்பெருக்கு விழா களையிழந்து காணப்பட்டது. ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கையொட்டி, பொதுமக்கள் தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையை பாா்வையிட்டு கடலில் நீராடிவிட்டு விழாவை கொண்டாடிவிட்டு செல்வா். தவிர, புதுமணத் தம்பதிகள் கடற்கரைக்கு வந்து கடலில் மாலைகளை விட்டு சாமி தரிசனம் செய்துவிட்டு கடலில் நீராடி செல்வா். இந்நிலையில் கரோனா தொற்று பரவல் காரணமாக கடற்கரையில் பொதுமக்கள் கூட தடை செய்யபட்டுள்ளதால் தரங்கம்பாடி கடற்கரைக்கு சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் வரவில்லை. இதனால், கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. கடற்கரையில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.