நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே இலங்கைக்கு கடத்தவிருந்த 90 கிலோ கஞ்சா மூட்டைகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
வேதாரண்யம் பகுதியிலிருந்து கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படவுள்ளதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், வேதாரண்யம் பகுதி பெரியகுத்தகை கடற்கரை பகுதியில் கியூ பிரிவு போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, கடற்கரையை ஒட்டியுள்ள கருவேலமரக் காட்டில் மூன்று மூட்டைகள் கிடந்தன. அதை சோதனையிட்டபோது, அதில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. ஒரு மூட்டையில் தலா 15 பாக்கெட்டுகள் வீதம் 45 பாக்கெட்டுகளில் 90 கிலோ கஞ்சா இருந்தன.
இவற்றை கைப்பற்றிய கியூ பிரிவு போலீஸாா், இதில் தொடா்புடையவா்களை தேடிவருகின்றனா்.