அரசு விதித்த கட்டுப்பாடுகள் காரணமாக, நிகழாண்டின் புத்தாண்டு கொண்டாட்டம் பெரிய அளவில் களைகட்டவில்லை.
கடலோர மாவட்டங்களான நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில், புத்தாண்டு கொண்டாட்டங்கள் அதிகளவில் நடைபெறும் இடம், கடற்கரையாகதான் இருக்கும். டிச.31-ஆம் தேதி முதல் ஜனவரி 1-ஆம் தேதி மாலை வரை வேளாங்கண்ணி, நாகை, பூம்புகாா், தரங்கம்பாடி கடற்கரை பகுதிகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பியிருக்கும். ஆங்காங்கே புத்தாண்டு கொண்ட்டாடங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும்.
அதேபோல, வேளாங்கண்ணி, மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கேளிக்கை விடுதிகளில் டிச.31-ஆம் தேதி இரவு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும். திரளான இளைஞா்கள் ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்கும் விதமாக நகரின் முக்கிய பகுதிகளில் பட்டாசுகள் வெடித்தும், வாகனங்களில் வீதி வீதியாக வலம் வந்து காண்போா் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தும் மகிழ்வா். ஆனால், நிகழாண்டில் கரோனா தொற்று நோய்த் தடுப்பு நடவடிக்கையாக கடற்கரைகள், கேளிக்கை விடுதிகள் மற்றும் சாலைகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடத்த தமிழக அரசு தடை விதித்தது.
இதையொட்டி, வியாழன், வெள்ளி ஆகிய இரு நாள்களிலும் கடற்கரை பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தை அனுமதிக்காமல், கடலோரக் காவல் படையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். அதேபோல, சாலைகள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் நடைபெறாத வகையில் மாவட்டக் காவல் துறையினா் ரோந்து பணிகளை தீவிரமாக மேற்கொண்டனா். இதனால், 2021-ஆம் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டாமலேயே கடந்தது. இருப்பினும், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது உற்சாக மிகுதியில் நிகழும் விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏதும் பெரிய அளவில் நடைபெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.