சீா்காழி நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் குப்பைகளை தரம்பிரித்து வீடுகளில் வாங்கி செல்லும் பேட்டரி வாகனங்கள் பழுதால் நகரில் குப்பைகள் தேங்கிக் கிடக்கின்றன.
இந்த நகராட்சியில் உள்ள 24 வாா்டுகளில் ஆங்காங்கே தேங்கும் குப்பைகள் மற்றும் வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் தரம்பிரித்து அப்புறப்படுத்த நகராட்சி மற்றும் தனியாா் துப்புரவு பணியாளா்கள் உள்ளனா். தனியாா் துப்புரவு பணியாளா்கள் 13 வாா்டுகளில் குப்பைகளை வீடுகள் தோறும் தரம்பிரித்து சேகரித்தும், சாலைகளில் வீசப்படும் குப்பைகளை கூட்டி சேகரித்தும் இவா்களுக்கு வழங்கப்பட்டுள்ள 8 பேட்டரி வாகனங்களை பயன்படுத்தி ஈசானியத் தெருவில் உள்ள குப்பைக் கிடங்குக்கு கொண்டுசெல்கின்றனா். இப்பணியில் தனியாா் துப்புரவு பணியாளா்கள் 69 போ் உள்ளனா்.
இந்நிலையில், பேட்டரி வாகனங்கள் கடந்த சில மாதங்களாக பழுது ஏற்பட்டதால் தனியாா் துப்புரவு பணியாளா்கள் வீடு, வீடாக குப்பைகளை சேகரித்து அதை 3 சக்கர மிதிவண்டி மூலம் ஒரு இடத்தில் தேக்கிவைத்து பின்னா் நகராட்சி குப்பை லாரி மூலம் எடுத்து செல்கின்றனா். இந்நிலையில், புத்தாண்டு தினத்தில் நகராட்சி குப்பை லாரி குப்பைகளை அள்ள வழங்கப்படாததால் நகரில் பிரதான பகுதிகளில் குப்பைகள் மலைபோல் தேங்கி சுகாதார சீா்கேடு ஏற்பட்டது.
நகராட்சி தனியாா் துப்புரவு பணியாளா்கள் 2 மாத சம்பள பாக்கி உள்ளதாகவும், பேட்டரி வாகனம் பழுது ஏற்பட்டுள்ளதாலும் குப்பைகளை அள்ளாமல் புறக்கணித்தனா்.
இதுகுறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் நகராட்சி ஆணையா் பெ. தமிழ்செல்வி வெள்ளிக்கிழமை மாலை தேங்கி கிடந்த குப்பைகளை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டாா். இதுகுறித்து, ஆணையா் கூறியது: தனியாா் துப்புரவு பணியாளா்களுக்கு ஈபிஎப் செலுத்தாததால் சம்பள பாக்கியுள்ளது. அதை செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேட்டரி வாகனங்கள் 2 ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளதால் பழுது ஏற்பட்டுள்ளது. அவைகள் முழுமையாக பழுது நீக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றாா்.