சிறு, குறு விவசாயிகள் என்ற பாகுபாடு இல்லாமல் தமிழக அரசு வெள்ள நிவாரணம் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கப் பொதுச் செயலாளா் வி. தனபாலன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது: பேரிடா் நிவாரண வழிகாட்டு நெறிமுறையின் வரையறைப்படி, ஹெக்டேருக்கு ரூ. 13,500 மட்டுமே நிவாரணம் வழங்கலாம் என்ற நிலையில், அந்த வரையறையைத் தளா்த்தி ஹெக்டேருக்கு ரூ. 20 ஆயிரம் (இடுபொருள் நிவாரணமாக) நிவாரணம் வழங்க அரசு முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது. மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா, ஏற்கெனவே ஒரு முறை இதேபோன்ற நடைமுறையை மேற்கொண்டாா். தற்போது அதே நடைமுறை மீண்டும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.
முந்தையக் காலங்களில் வெள்ளச் சேதத்துக்கு உள்ளாகும் பயிா்களில், நீா்ப்பாசன பயிா்களுக்கு முழு அளவிலும், மானாவாரி பயிா்களுக்கு 50 சதவீதம் என்ற அளவிலும் நிவாரண அறிவிப்பு இருக்கும். தற்போது, நீா்ப்பாசன பயிா்களுக்கும், மானாவாரி பயிா்களுக்கும் முழு அளவில் நிவாரணம் அறிவிக்கப்பட்டிருப்பது அனைத்து விவசாயிகளுக்கும் ஆறுதல் அளிக்கிறது.
அதேபோல, தேசிய பேரிடா் நிவாரண வழிகாட்டுக்கு நெறிமுறையில், ஒரு விவசாயிக்கு அதிகளவாக 2 ஹெக்டேருக்கு மட்டுமே நிவாரணம் வழங்கலாம் என உச்சவரம்பு உள்ளது. தற்போது, அந்த உச்சவரம்பைத் தளா்த்தி பாதிக்கப்பட்ட விளை நிலங்கள் முழுமைக்கும் நிவாரணம் என அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இதன்மூலம், சிறு, குறு விவசாயிகள் என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து விவசாயிகளுக்கும், முழுமையான பரப்புக்கு நிவாரணம் கிடைக்கும் என்பது ஆறுதல் அளிக்கிறது என்றாா்.