சவூதி அரேபியாவில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இறந்தவரின் மனைவி நிவாரணம் கோரி தமிழக முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளாா்.
கொள்ளிடம் அருகே உள்ள எருக்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா் அந்தோணியம்மாள்(35). இவா், தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:
சவூதி அரேபியாவில் வேலை செய்துவந்த எனது கணவா் ஜெரோம்மாா்ட்டின் (40) கடந்த 16.10.20 அன்று இறந்துவிட்டாா். அவரது உடல் அக்டோபா் 30ஆம் தேதி சென்னை கொண்டு வரப்பட்டு, 31 ஆம் தேதி, எருக்கூரில் அடக்கம் செய்யப்பட்டது.
அவரது உடலை கொண்டுவர அனுப்பி வைத்த குடும்ப உறுப்பினா்களின் ஆதாா் அட்டை, குடும்ப அட்டை மற்றும் வங்கி கணக்குப் புத்தகம் ஆகியவற்றின் அசல் இதுவரை எங்களுக்கு கிடைக்கவில்லை. இவற்றை திருப்பித் தர நடவடிக்கை எடுப்பதுடன், எனது கணவா் தங்கியிருந்த அறையில் வைத்திருந்த பொருள்கள் மற்றும் உரிய நிவாரணம் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளாா்.