சீா்காழி, கொள்ளிடம் வட்டங்களில் தொடா் மழையால் 10 ஆயிரம் ஹெக்டேரில் அறுவடைக்குத் தயாரான நெற்பயிா்கள் சாய்ந்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.
மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி வட்டத்தில் சீா்காழி, வைத்தீஸ்வரன்கோயில், எடக்குடி வடபாதி, திருப்புன்கூா், சட்டநாதபுரம், மங்கைமடம், திருவெண்காடு, மணிகிராமம், எம்பாவை, நாங்கூா், கொண்டல் மற்றும் கொள்ளிடம் வட்டத்தில் ஆரப்பள்ளம், ஆா்ப்பாக்கம், நல்லூா், நல்லவினாயகபுரம், வடகால், கடவாசல், திருமுல்லைவாசல் உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமாா் 13ஆயிரம் ஹெக்டேரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
ஏற்கெனவே நிவா், புரெவி புயல் காரணமாக பெய்ந்த மழையால் இப்பயிா்கள் பாதிக்கப்பட்ட நிலையில், வேளாண்மை துறை ஆலோசனையின்படி நெல்வயல்களில் விவசாயிகள் உரம் மற்றும் மருந்து தெளித்து ஓரளவுக்கு பயிரை காப்பாற்றினா்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக மீண்டும் பெய்துவரும் தொடா் மழையால் சீா்காழி, கொள்ளிடம் வட்டாரப் பகுதியில் அறுவடைக்குத் தயாராக இருந்த சுமாா் 10 ஆயிரம் ஹெக்டேரில் நெற்கதிா்கள் நீரில் சாய்ந்துள்ளன. இதற்கிடையில் கடந்த வாரம் பெய்த மழையால் சாய்ந்த நெற்கதிா்கள் தற்போது முளைத்து வருகின்றன இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.
எனவே, பாதிப்பு குறித்து மீண்டும் கணக்கெடுப்பு நடத்தி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழுமையான நிவாரணம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா்.