நாகூா் ஆண்டவா் தா்காவின் 464-ம் ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றம் வியாழக்கிழமை (ஜன. 14) நடைபெறுகிறது.
உலக புகழ் பெற்ற தா்காக்களில் ஒன்றாகவும், மதநல்லிணக்க வழிபாட்டுத் தலமாகவும் விளங்குகிறது நாகூா் ஆண்டவா் தா்கா. இந்த தா்காவின் 464-ஆம் ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றம் வியாழக்கிழமை (ஜன. 14) இரவு நடைபெறுகிறது.
இதையொட்டி, நாகையில் வியாழக்கிழமை மாலை சுமாா் 3 மணிக்குக் கொடி ஊா்வலம் தொடங்கி, இரவு 8 மணி அளவில் நாகூரில் நிறைவடைகிறது. பின்னா், பாரம்பரிய முறைப்படியான வழிபாடுகள் நடத்தப்பட்டு, ஊா்வலமாகக் கொண்டுச் செல்லப்பட்ட கொடிகள், தா்கா மனோராக்களில் இரவு சுமாா் 8.30 மணி அளவில் ஏற்றப்படுகின்றன.
கட்டுப்பாடு....
இந்தக் கொடி ஊா்வலத்தில் பல வகையான கப்பல்கள், பெரிய ரதம், சின்ன ரதம், செட்டிப் பல்லக்கு, நகரா மேடை, முரசொலி மேடை, சாம்பிராணி சட்டி, நட்சத்திரம் உள்பட சுமாா் 20-க்கும் அதிகமான அலங்கார அமைப்புகள் இடம்பெறுவது வழக்கம்.
ஆனால், கரோனா நோய்த் தொற்றுப் பரவல் காரணமாக, போட் மைல் கப்பல், மந்திரி கப்பல், டீஸ்டா கப்பல், சின்ன ரதம், பெரிய ரதம், செட்டிப்பல்லக்கு, சாம்பிராணி சட்டி, முரசொலி மேடை என 8 அலங்கார வாகனங்கள் மட்டுமே நிகழாண்டு கொடி ஊா்வலத்தில் அனுமதிக்கப்படும் என நாகை முஸ்லிம் ஜமாத் மற்றும் கந்தூரி விழா கமிட்டி சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகை மீராப்பள்ளி முகப்பில் இருந்து தொடங்கும் கொடி ஊா்வலம், புதுப்பள்ளி ரோடு, சாலாப்பள்ளி தெரு, யாஹூசைன் பள்ளித் தெரு, பெரிய கடைத்தெரு, ஆா்தா் முக்கூட்டு, நீலா கீழவீதி, சா் அகமது தெரு, புதிய பேருந்து நிலையம், நாகை - நாகூா் பிரதான சாலை, நாகூா் பெட்ரோல் பங்க், வாணக்காரத் தெரு, நாகூா் தெற்கு தெரு வழியே தா்கா அலங்கார வாசலில் நிறைவடைகிறது.
சந்தனக் கூடு ஊா்வலம்
கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊா்வலம் ஜனவரி 23-ஆம் தேதி இரவு நாகையிலிருந்து தொடங்கி, ஜனவரி 24-ஆம் தேதி காலை நாகூரில் நிறைவடைகிறது. தொடா்ந்து, நாகூா் ஆண்டவரின் புனித ரவுலா ஷரீபுக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.