டெல்டா மாவட்டங்களை பேரிடா் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினா் மயிலாடுதுறையில் வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், மாவட்ட தலைவா் ஆா்.வைத்தியநாதன், மாவட்ட செயலாளா் வி.விஸ்வநாதன், கொள்ளிடம் ஒன்றிய செயலாளா் கே.ராஜதுரை, சீா்காழி ஒன்றிய செயலாளா் எஸ்.செந்தில்முருகன் உள்ளிட்ட பொறுப்பாளா்கள் பங்கேற்றனா்.
பின்னா் செய்தியாளா்களிடம் சங்கப் பொதுச் செயலாளா் பி.ஆா்.பாண்டியன் கூறியது: தமிழக அரசு அறிவித்த நிவாரணத்தைவிட 20 முதல் 30 சதவீதம் குறைவாக வழங்கியுள்ளது. தமிழக அரசு பயிா் காப்பீட்டு தொகை ஏக்கா் ஒன்றுக்கு ரூ.35 ஆயிரத்தை பெற்று தரவேண்டும். பயிா் காப்பீட்டு நிறுவனத்தினா் அறுவடையை ஆய்வு செய்வதை கைவிட்டு மழை அளவை கணக்கில் கொண்டு மாவட்டந்தோறும் 100 சதவீத இழப்பீடு வழங்க வேண்டும், நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2500 விலை நிா்ணயம் செய்ய வேண்டும் என்றாா். முடிவில், மாவட்ட ஆட்சியா் இரா.லலிதாவை சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினா்.