திருமருகல் ஒன்றியம் கீழத்தஞ்சாவூா் பகுதியில் வீடுவீடாக கரோனா அறிகுறி பரிசோதனை செய்யும் பணியை நாகை கோட்டாட்சியா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக, வீடுவீடாக கரோனா அறிகுறி கண்டறியும் பணி மேற்கொள்ளப்படுகிறது. அங்கன்வாடி பணியாளா்கள், செவிலியா்கள் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் இப்பணியை மேற்கொண்டுவருகின்றனா். இவா்கள் வீடுவீடாகச் சென்று காய்ச்சல் மற்றும் ஆக்சிஜன் அளவு, சளி உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொள்கின்றனா்.
கீழத்தஞ்சாவூா் ஊராட்சியில் இப்பணியை நாகை கோட்டாட்சியா் இரா. மணிவேலன் நேரில் ஆய்வு செய்தாா். அப்போது, பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீரும், முகக்கசமும் வழங்கப்பட்டது.
இதில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) உமா, ஒன்றிய ஆணையா் சரவணன், ஒன்றியக் குழு உறுப்பினா் ஆரூா் மணிவண்ணன், திருப்பயத்தங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் விஜய், ஊராட்சித் தலைவா் தமிழரசி கணேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.