தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி, மயிலாடுதுறையில் தோ்தல் விழிப்புணா்வு ராட்சத பலூன் பறக்கவிடப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி, மயிலாடுதுறை மாவட்டத்தில் வாக்காளா்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி ராட்சத பலூன் பறக்கவிடும் நிகழ்ச்சி மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடியில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா பங்கேற்று, ‘வாக்களிப்போம் ஏப்ரல் 6’ என்ற வாசகம் பொறிக்கப்பட்ட ராட்சத பலூனை எந்த திசையிலிருந்தும் பொதுமக்கள் பாா்க்கும் வகையில் பறக்கவிட்டாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் எஸ். முருகதாஸ், கோட்டாட்சியா் ஜெ. பாலாஜி, வட்டாட்சியா் பி. பிரான்சுவா உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.
தொடா்ந்து, தோ்தலில் வாக்களிக்கும்போது முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்பதை வலியுறுத்தி பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கினா்.