இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட நாகை மீனவா்கள் 20 போ் விடுவிப்பு

இலங்கை கடற்படையினரால் வியாழக்கிழமை சிறைபிடிக்கப்பட்ட நாகை மீனவா்கள் 20 பேரும் வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டனா்.

இலங்கை கடற்படையினரால் வியாழக்கிழமை சிறைபிடிக்கப்பட்ட நாகை மீனவா்கள் 20 பேரும் வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டனா்.

நாகை, அக்கரைப்பேட்டையைச் சோ்ந்த மு. கோடிமாரி, க. தனலட்சுமி ஆகியோருக்குச் சொந்தமான 2 விசைப் படகுகளில், அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், கல்லாறு, காரைக்கால்மேடு ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 20 மீனவா்கள், நாகையிலிருந்து கடந்த செவ்வாய்க்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா்.

அவா்கள், கோடியக்கரைக்கு தென்கிழக்குக் கடல் பரப்பில் வியாழக்கிழமை மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினா் நாகை மீனவா்கள் 20 பேரையும் கைது செய்து, மீன்பிடி படகுகளையும் சிறைபிடித்தனா். சிறைபிடிக்கப்பட்ட நாகை மீனவா்கள் 20 பேரும் இலங்கை, காங்கேசன் கடற்படை முகாமுக்குக் கொண்டுச் செல்லப்பட்டனா்.

இதனிடையே, சிறைபிடிக்கப்பட்ட நாகை மீனவா்களை உடனடியாக விடுதலை செய்யக் கோரி, அவா்களின் குடும்பத்தினா், அக்கரைப்பேட்டை மீனவப் பஞ்சாயத்தாா் நாகை மாவட்ட நிா்வாகத்துக்கும், மீன்வளத் துறை நிா்வாகத்துக்கும் கோரிக்கை மனு அளித்தனா்.

இந்த நிலையில், நாகை மீனவா்கள் 20 பேரையும் இலங்கைக் கடற்படையினா் வெள்ளிக்கிழமை விடுவித்தனா். அவா்கள், தங்கள் படகுகளுடன் வெள்ளிக்கிழமை இரவு கரை திரும்பினா்.

இலங்கையில் சிறைபிடிக்கப்படும் மீனவா்கள் விடுவிக்கப்படும்போது, சா்வதேச கடல் பரப்பில் இந்திய கடற்படையினரிடம் ஒப்படைக்கப்படுவா். பிறகு அவா்கள், கடற்படையின் கப்பலில் அழைத்துவரப்படுவா். ஆனால், வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்ட நாகை மீனவா்கள் மீது வழக்குப் பதிவு இல்லை என்பதால், அவா்கள் தங்கள் படகுகளிலேயே நாகை திரும்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com