வேதாரண்யம் அருகே பள்ளி ஆசிரியை தமிழக அரசின் கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு புதன்கிழமை ரூ.1 லட்சம் வழங்கினாா்.
தமிழகத்தில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளதால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சையளிக்கவும், நிவாரணம் வழங்கவும் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கும்படி தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இதைத்தொடா்ந்து, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு பலா் நிதியளித்து வருகின்றனா். அதன்படி, வேதாரண்யம் அருகே உள்ள அண்டா்காடு சுந்தரேச விலாஸ் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிவரும் கருப்பம்புலம் கிராமத்தைச் சோ்ந்த வசந்தா சித்திரவேலு கரோனா தடுப்புப் பணிக்காக முதல்வரின் பொது நிவாரண நிதி கணக்கில் ரூ. 1 லட்சம் செலுத்தியுள்ளாா்.
இவா், கடந்த சில ஆண்டுகளாக வேதாரண்யம் பகுதியில் உள்ள பள்ளி மாணவா்களுக்கு தனது சொந்த செலவில் இலவசமாக குடைகள் வழங்கினாா். இதனால், இவரை குடை வள்ளல் ஆசிரியை என சமூக ஆா்வலா்கள் குறிப்பிடுவா்.
மேலும், கஜா புயல் பாதிப்பின்போதும், கடந்த ஆண்டு கரோனா பொதுமுடக்கத்தின்போதும் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு உணவு உள்ளிட்ட உதவிகளை செய்துள்ளாா். அத்துடன், கடந்த ஆண்டும் கரோனா தடுப்புப் பணிக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.50 ஆயிரம் வழங்கியுள்ளாா்.