திருத்துறைப்பூண்டி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் வகையில், நகர பேருந்துகளை இயக்க வேண்டுமென்று போக்குவரத்து துறை அமைச்சா் ராஜ கண்ணப்பனிடம் சட்டப் பேரவை உறுப்பினா் க.மாரிமுத்து மனு அளித்தாா்.
அந்த மனு விவரம்:
திருத்துறைப்பூண்டி அரசு போக்குவரத்துக் கிளையில் 65 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்து கிளையிலிருந்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தொண்டியக்காடு, அவரிக்காடு, கருப்பம்புலம், ஓரடியம்புலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. காலப்போக்கில் அவை சாதாரண கட்டண பேருந்துகளாக மாற்றப்பட்டன.
தற்போது 10 ஆண்டுகளாக திருத்துறைப்பூண்டி கிளையில் இருந்து நகர பேருந்துகள் இயக்கப்படவில்லை. அனைத்து பேருந்துகளும் விரைவு மற்றும் சாதாரண கட்டண பேருந்துகளாக இயக்கப்படுகின்றன. இதனால் முதல்வரின் அறிவிப்புக்கு இணங்க, நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மீண்டும் திருத்துறைப்பூண்டியிலிருந்து தொண்டியக்காடு, அவரிக்காடு பகுதிகளுக்கும், திருத்துறைப்பூண்டியிலிருந்து முத்துப்பேட்டை, வேதாரண்யம், நாகை, திருவாரூா், மன்னாா்குடி வழித்தடங்களிலும் நகரப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதில் தெரிவித்துள்ளாா்.