கோடியக்கரை வன உயிரினப் பாதுகாப்பு சரணாலயப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக உணவகம் புதன்கிழமை திறக்கப்பட்டது.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை வன உயிரின சரணாலயத்தில் அரிய வகை வெளிமான்கள் உள்ளிட்ட வன விலங்குகள் வசிக்கின்றன. மேலும், வடகிழக்குப் பருவ மழைக் காலத்தில் இங்கு வெளிநாட்டுப் பறவைகளும் வலசை வருவது வழக்கம். இந்த பறவைகள் மற்றும் வனவிலங்குகளை காண பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்கின்றனா்.
இவா்களின் வசதிக்காக வனவிலங்கு சரணாலய நுழைவுவாயில் பகுதியில் புதிய உணவகம் திறக்கப்பட்டுள்ளது. வனத்துறையுடன் 5 சூழல் மேம்பாட்டுக் குழுக்கள் இணைந்த இந்த உணவகத்தை பராமரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு, தேநீா், காபி, சிற்றுண்டிகள் தவிர சைவ, அசைவ உணவுகளும் கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளனா். கழிப்பிட வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த உணவகத்தை நாகை மாவட்ட வன உயிரினக் காப்பாளா் யோகேஸ்குமாா் மீனா தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில், வனச்சரக அலுவலா் அயூப்கான் (வேதாரண்யம்), டேனியல் (நாகை), கோடியக்கரை ஊராட்சித் தலைவா் சுப்பிரமணியன், துணைத் தலைவா் குமாா் மற்றும் வனவா்கள், சூழல் மேம்பாட்டு குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.