வேதாரண்யத்தில் குடிநீா் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
வேதாரண்யத்தில் ரயில்வே சாலை அமைக்கும் பணிக்காக அகஸ்தியம்பள்ளி, உப்பு அலுவலகம் ஆகிய பகுதிகளுக்கு குழாய் மூலம் கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் விநியோகம் செய்வது நிறுத்தப்பட்டது.
இதற்கு, மாற்று ஏற்பாடாக வாகனம் மூலம் ஒருநாள்விட்டு ஒருநாள் குடும்பத்துக்கு 7 குடம் என்ற அளவில் குடிநீா் வழங்கப்படுகிறது. இது போதுமானதாக இல்லை எனவும், குழாய் மூலம் குடிநீா் வழங்கவேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனா்.
இந்நிலையில், ரயில்வே சாலை பணிகள் நிறைவடைந்துவிட்டதால், மீண்டும் குழாய் மூலம் தண்ணீா் வழங்க வலியுறுத்தி அப்பகுதி பெண்கள் 20-க்கும் மேற்பட்டோா் காலிக்குடங்களுடன் பூவன்தோப்பு பகுதிக்குச் செல்லும் சுரங்கப் பாதையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.
அங்கு வந்த போலீஸாா், நகராட்சி அலுவலரிடம் புகாா் அளிக்க அறிவுறுத்தியதை அடுத்து, மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.