நாகை மாவட்டம், கோடியக்கரைக்கு அப்பால் நடுக்கடலில் மீன்பிடித்த வேதாரண்யம் மீனவர்களின் வலைகள், உடைமைகளை இலங்கை மீனவர்கள் பறித்துச் சென்றது தொடர்பாக இன்று (செப்.2) கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
வேதாரண்யம் ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள்,வியாழக்கிழமை அதிகாலையில் கோடியக்கரைக்கு தென்கிழக்கே நடுக்கடலில் படகுகளை நிறுத்தி மீன்பிடித்துள்ளனர்.
அப்போது , இலங்கை மீனவர்கள் எனக் கருதப்படும் சிலர் 2 படகுகளில் வந்து தமிழக மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்து பொருள்களை பறித்து சென்றுள்ளனர்.
சங்கர் என்பவரது படகில் ஏறிய அந்த நபர்கள் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 400 கிலோ மீன்பிடி வலைகள், சிவகுமார் படகில் வலை மற்றும் ஜிபி எல் கருவி, மீனவர்கள் பயன்படுத்தும் தகவல் தொடர்பு கருவி (வாக்கி டாக்கி), கை விளக்குகளை பறித்துக் கொண்டு மீனவர்களை விரட்டியடித்தனராம்.
வியாழக்கிழமை பிற்பகலில் கரை திரும்பிய மீனவர்கள் வேதாரண்யம் கடலோரக் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.