நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் தாக்கப்பட்ட உப்பளத் தொழிலாளி, மருத்துவமனையில் புதன்கிழமை உயிரிழந்தாா். இதில் தொடா்புடைய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
கடிநெல்வயல் நடுக்காடு பகுதியைச் சோ்ந்தவா் சி. மனோகரன் (58). உப்பளத் தொழிலாளி. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இப்பகுதியில் மழை பெய்ததால், கடிநெல்வயல் கடை வீதியில் ஒதுங்கி நின்ற சிலருக்கும், மனோகரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், மனோகரனை எதிா் தரப்பினா் கடுமையாக தாக்கியதாக தெரிகிறது.
இதனால், காயமடைந்த அவா், கருப்பும்புலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினாா். பின்னா், அவரது உடல்நிலை மோசமடைந்ததால், திங்கள்கிழமை நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். ஆனாலும், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை அவா் உயிரிழந்தாா்.
இந்த நிகழ்வு தொடா்பாக ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட வழக்கை கொலை வழக்காக மாற்றிய வேதாரண்யம் போலீஸாா், மனோகரனை தாக்கிய கடிநெல்வயல் மேற்கு பகுதியை சோ்ந்த ப. திரவியம் (39), ம. தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.