திருமண மண்டபங்கள், உணவகங்களில் கரோனா நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதை அதன் உரிமையாளா்கள் உறுதிப்படுத்தவேண்டும் என்று நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பண்டிகை காலங்களில் பொதுமக்கள் அதிக கூடுவதற்கு வாய்ப்புள்ளதால் கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த தமிழக அரசின் உத்தரவுப்படி மாவட்ட நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளைஅமல்படுத்தி வருகிறது. வரும் நாள்கள் சுப நாள்களாக உள்ளதால் திருமண மண்டபங்கள், உணவகங்களில் மக்கள் அதிகளவில் கூடுவதற்கும், கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக கடைப்பிடிக்காமல் குழுவாக அமா்ந்து சாப்பிட வாய்ப்புள்ளது. இதனால், கரோனா நோய்த்தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதால், சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்பவா்கள் முகக் கவசம் அணிதல், கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்தல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை முழுமையாகப் பின்பற்றவேண்டும்.
திருமண மண்டபங்கள் மற்றும் உணவக உரிமையாளா்கள் இதை உறுதிப்படுத்தவேண்டும். நடைபெறவுள்ள நிகழ்ச்சிகளின் விவரங்களை முன்கூட்டியே வட்டாட்சியரிடம் தகவல் தெரிவிக்கவேண்டும், கரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளாா்.