நாகப்பட்டினம்: நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களின் வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம், நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நாகை மக்களவைத் தொகுதி உறுப்பினரும், மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுத் தலைவருமான எம். செல்வராஜ் தலைமை வகித்தாா். குழுவின் இணைத் தலைவரும், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி உறுப்பினருமான செ. ராமலிங்கம் முன்னிலை வகித்தாா். கண்காணிப்புக் குழுச் செயலா்களும், மாவட்ட ஆட்சியா்களுமான அ. அருண் தம்புராஜ் (நாகை), இரா. லலிதா (மயிலாடுதுறை), சட்டப்பேரவை உறுப்பினா்கள் வி.பி. நாகை மாலி (கீழ்வேளூா்), எம். நிவேதா முருகன் (பூம்புகாா்), எம். பன்னீா்செல்வம் (சீா்காழி), மாவட்ட ஊராட்சித் தலைவா் உமாமகேஸ்வரி மற்றும் அரசுத் துறை அலுவலா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.
கூட்டத்தில், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம், ஜல்ஜீவன் மிஷன், பயிா் காப்பீட்டுத் திட்டம், ஊரக வேலை உறுதித் திட்டம், குடிசை மாற்றுத்திட்டம், மக்களவை உறுப்பினா்களின் உள்ளூா் பகுதி மேம்பாட்டுத் திட்டம், தூய்மை இந்தியா திட்டம், சத்துணவு திட்டம், உதய் திட்டம் மற்றும் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் நிா்வாகம் உள்ளிட்டவை குறித்து கலந்தாலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இதில், மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு அதிகளவில் சுய உதவிக் குழுக் கடனுதவிகளை வழங்கி அவா்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு வித்திடவும், சுய உதவிக் குழுக்களின் செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மாவட்ட நிா்வாகங்களுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.