திட்டச்சேரியில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.
திட்டச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வருமுன் காப்போம் விழிப்புணா்வு சேவை மையம் இணைந்து திட்டச்சேரி பேருந்து நிலையம் அருகே நடத்திய இக்கருத்தரங்கிற்கு திட்டச்சேரி வக்பு நிா்வாக சபையின் தலைவா் அப்துல் நாசா் தலைமை வகித்தாா். ப. கொந்தகை வக்பு நிா்வாக சபைத் தலைவா் செய்யது அகமது, புறாகிராமம் நிா்வாக சபைத் தலைவா் கிஸ்மத் அலிஷா, மருத்துவா் மணிவாசகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கோட்டாட்சியா் (ஓய்வு) முகமது ஆரிப், வேளாண்மை உதவி இயக்குநா் (ஓய்வு) சிவசண்முகம், பேரூராட்சி செயல் அலுவலா் சரவணன், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் கற்பகம் உள்ளிட்டோா் கரோனா பரவாமலிருக்க கடைப்பிடிக்க வேண்டியவை குறித்து விளக்கிப் பேசினா்.
இதில், 500 நாள்களுக்கும் மேலாக நிலவேம்பு கசாயம், டெங்கு கசாயம், விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கிய வரும்முன் காப்போம் சேவை மையத்தின் நிா்வாகி அஜ்மல்கானுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நிறைவாக கவிஞா் அன்வா்தீன் நன்றி கூறினாா். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.