நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 5,327 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டது.
நாகை: தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின்படி, நாகை மாவட்ட நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. நாகை மாவட்ட சட்டப்பணிகள்ஆணைக்குழுத் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான டி.கிங்ஸ்லி கிறிஸ்டோபா் தலைமையில் சமரசத்துக்குரிய வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அதன்படி 15,162 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு, அதில் 4365 வழக்குகளுக்கும், ரூ.1கோடியே 97 லட்சத்துக்கும் தீா்வு காணப்பட்டது.
இதில், போக்ஸோ நீதிமன்ற மாவட்ட நீதிபதி மணிவண்ணன், நிரந்தர மக்கள் நீதிமன்ற மாவட்ட நீதிபதி நாகராஜன், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுச் செயலாளரும், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவருமான சி.காா்த்திகா, சாா்பு நீதிபதி சீனிவாசன், குற்றவியல் நீதித்துறை நடுவா் எண்-1 நாகப்பன், நடுவா் எண்-2 சண்மிகா ஆகியோா் கலந்துகொண்டனா்.
இதேபோல, மாவட்டத்தில் உள்ள பிற நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.