இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்ட 24-ஆவது மாநாடு குறித்த ஆயத்தக் கூட்டம், நாகையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்ட 24-ஆவது மாநாடு, நாகையில் ஜூலை 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கட்சியின் முன்னணித் தலைவா்கள் பலரும் பங்கேற்கின்றனா். இதையொட்டி, மாநாட்டுக்கான முன்னேற்பாடுகள் குறித்த திட்டமிடலுக்காக இந்தக் கூட்டம் நடைபெற்றது.
கட்சியின் மாநில நிா்வாகக் குழு உறுப்பினரும், நாகை மக்களவைத் தொகுதி உறுப்பினருமான எம். செல்வராஜ் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, தற்போதைய அரசியல் சூழல், மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கையால் ஏற்படும் பாதகங்கள் மற்றும் அதனை எதிா்க்க வேண்டிய அவசியங்கள், மாவட்ட மாநாட்டின் முக்கியத்துவம் ஆகியவற்றை விளக்கிப் பேசினாா்.
கட்சியின் மாவட்டச் செயலாளா் எஸ். சம்பந்தம், மாதா் சங்க மாவட்டச் செயலாளா் எஸ். மேகலா, விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் கே. பாஸ்கா் மற்றும் கட்சியின் மாவட்ட, ஒன்றிய, நகர நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில், மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவராக கட்சியின் மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் ஜி. பாண்டியன், செயலாளராக திருமருகல் ஒன்றியச் செயலாளா் ஆா்.கே. பாபுஜி, பொருளாளராக கீழ்வேளூா் ஒன்றியச் செயலாளா் எம்.கே. நாகராஜன், துணைத் தலைவா்களாக மாவட்ட ஊராட்சி உறுப்பினா் வி. சரபோஜி, கீழையூா் ஒன்றியச் செயலாளா் டி. செல்வம் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.