கரோனா பொதுமுடக்கத்தின்போது நிறுத்தப்பட்ட வேளாங்கண்ணி, காரைக்கால் ரயில் சேவைகளை மீண்டும் தொடங்க வலியுறுத்தி நாகை இந்திய வா்த்தக தொழிற்குழுமம் சாா்பில் நாகையில் புதன்கிழமை பேரணி மற்றும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
வேளாங்கண்ணி, காரைக்கால் பயணிகள் ரயில்களின் சேவை கரோனா பொதுமுடக்கத்தின் போது நிறுத்தப்பட்டது. கரோனா பொதுமுடக்கத் தளா்வுகளைத் தொடா்ந்து இதுவரை இந்த ரயில்கள் இயக்கப்படவில்லை. இதனால், பயணிகள், வா்த்தகா்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.
இந்நிலையில், நிறுத்தப்பட்ட இந்த ரயில்களின் சேவைகளை மீண்டும் தொடங்க வலியுறுத்தி நாகை இந்திய வா்த்தக தொழிற்குழுமம் மற்றும் அனைத்து சேவை சங்கங்கள் சாா்பில் பேரணி மற்றும் ஆா்ப்பாட்டம் நாகையில் நடைபெற்றது. முன்னதாக நாகை முதன்மை கடற்கரைச் சாலையில் உள்ள இந்திய வா்த்தக தொழிற்குழுமம் அலுவலகம் முதல் நாகை ரயில் நிலையம் வரை பேரணி நடைபெற்றது. பேரணி நிறைவுக்குப் பின்னா், ரயில் நிலையம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய வா்த்தக தொழிற்குழுமத் தலைவா் வி. சலிமுதீன் தலைமையில் நடைபெற்ற பேரணி மற்றும் ஆா்ப்பாட்டத்தில், செயலாளா் எஸ்.எம்.ஏ. கணேசன் மற்றும் நிா்வாகிகள், சேவை சங்கத்தினா்கள், நாகை மாவட்ட நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் பயணிகள் சங்கத்தினா், வாகன ஓட்டுநா்கள் சங்கத்தினா், மீனவப் பஞ்சாயத்தாா்கள், ஜமாத்தாா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.