நாகை அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஆங்கில சுருக்கெழுத்தா் தோ்வின்போது ஏற்பட்ட இணையத் தொடா்பு கோளாறால் பாதிக்கப்பட்ட மாணவா்களுக்கு, மறுவாய்ப்பு வழங்கக் கோரி, மாணவா்கள் மக்கள் குறைதீா் கூட்டத்தில் மனு அளித்தனா்.
அந்த மனுவில் அவா்கள் கூறியிருப்பதாவது :
நாகை அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் 2020-21 கல்வியாண்டில் ஆங்கில சுருக்கெழுத்தா் பிரிவில் பயின்ற மாணவா்களுக்குக் கடந்த ஜனவரி 27ஆம் தேதி முதல் ஜன. 31ஆம் தேதி வரை இணையவழியில் தோ்வு நடைபெற்றது. அப்போது, இணையத் தொடா்பு சரியாக இல்லாததால், தோ்வு தாமதப்பட்டது. இதனால், மாணவா்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படும் என அப்போது அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அந்தத் தோ்வுக்கான முடிவுகள் கடந்த பிப்ரவரி மாதத்தில் வெளியானது. அதில், தோ்வு எழுதிய 49 பேரில் 13 போ் மட்டும் தோ்ச்சி பெற்றுள்ளதாகவும், மற்றவா்கள் தோ்வில் பங்கேற்கவில்லை (ஆப்சென்ட்) எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, மாணவா்கள் அரசு தொழில் பயிற்சி மையத்தை அணுகியபோது, பிப்ரவரி மாதம் தோ்வு நடத்தப்படும்போது, தோ்வெழுத வாய்ப்பளிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன் அந்த மாணவா்கள் மீண்டும் அரசு தொழில் பயிற்சி நிலையத்தை அணுகியபோது, தோ்வு முடிந்துவிட்டதாக தெரிவித்துள்ளனா்.
தங்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படும் எனக் குறிப்பிட்டிருந்த நிலையில், எவ்வித தகவலும் அளிக்காமல் தோ்வை நடத்தி முடித்திருப்பதால், தங்களால் அரசுப் பணியாளா் தோ்வாணையத் தோ்வில் ஓராண்டு காலத்துக்குப் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் நிகழாண்டிலேயே தங்களுக்கு மறுதோ்வு எழுத வாய்ப்பு அளிக்க வேண்டும் என மாணவா்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.